கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவர் பி.டி.செல்வகுமார் பரபரப்பு பேட்டி

2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று விஜய் முதல்வர் ஆவார்

கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவர் பி.டி.செல்வகுமார் பரபரப்பு பேட்டி

2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மக்களின் பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முதல்வர் ஆவார் என கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவர் பி.டி.செல்வகுமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகம் மற்றும் கொடி பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை, பனையூரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் விமரிசையாக நடைபெற்றது. இந்நிலையில் கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவர் பி.டி.செல்வகுமார் இன்று நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: இந்திய திரை உலகின் முன்னணி நட்சத்திரங்களுள் ஒருவராக மக்களால் அறியப்படும் நடிகர் விஜய் அண்மையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை தொடங்கியுள்ளார். இந்நிலையில் கட்சியின் கொடி. கொடி பாடல் அறிமுக விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
நடிகர் விஜய் அவர்களுடன் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்துள்ளேன். மிகவும் அமைதியானவர். அனைவரிடமும் அன்பாக பழகக்கூடியவர். அவருடைய தாய், தந்தை மீது எனக்கு அளவு கடந்த மரியாதை உண்டு. அவரது குடும்பத்தில் ஒருவனாக இன்றளவும் நட்பு தொடர்கிறது. தமிழ் திரையுலகம் அவருக்கு சிறப்பான வரவேற்பை அளித்தது போன்று அரசியல் உலகம் அதைவிட கூடுதல் வரவேற்பை நிச்சயம் அளிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
இந்தியாவில் கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்னர் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டுமே இருந்தது. ஆனால் இன்றைக்கு புற்றீசல் போல கட்சிகள் எண்ணிக்கை பெருகியுள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை திராவிட கழகங்கள் மாறி, மாறி ஆட்சி செய்து வருகின்றன. ஆனால் மக்களுக்கோ, இளைஞர்களுக்கு, விவசாயிகள் வாழ்க்கையில் எவ்வித மாற்றமோ, வளர்ச்சியோ ஏற்படவில்லை. பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி காலத்தில் விவசாயம், கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அவரது ஆட்சிக்குப் பின்னர் நாடு முன்னேற்றப்பாதைக்கு செல்லவில்லை.
இதன் காரணமாக தமிழக மக்கள் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற ஒரே காரணத்தால் விஜய் அவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கியுள்ளார். அவரால் நிச்சயம் புதிய மாற்றம் நிகழும். 25 ஆண்டுகள் அவருடன் வேலை பார்த்தவன் என்பதால் நான் இதை உறுதியாக சொல்கிறேன். அவரிடம் ஒரு காந்த சக்தி உள்ளதை பலமுறை பார்த்துள்ளேன். மிகக்கடினமாக உழைக்கக்கூடிவர். யாருக்கும் தன்னால் தீங்கு ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பவர்.
இதுபோன்ற தெளிவான சிந்தனை கொண்ட அவரால் நிச்சயம் அரசியல் மாற்றத்தை கொண்டு வரமுடியும். தமிழகத்தில் நீண்ட நாள்களாக புரையோடிப்போன அரசியலை சுத்தம் செய்யும் மக்கள் சக்தியாக விஜய் உருவெடுப்பார். அவரது அரசியல் பயணத்தை கலப்பை மக்கள் இயக்கம் வரவேற்கிறது. அவரது கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபடுவதுடன், மக்கள் பிரச்சினைக்காக அவருடன் இணைந்து போராடுவோம். 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் மக்களின் அமோக ஆதரவுடன் ஆட்சிப் பொறுப்புக்கு வரும். முதல்வராக விஜய் பதவியேற்பார்.
கலப்பை மக்கள் இயக்கத்தைப் பொருத்தவரை இதுஒரு தொண்டு நிறுவனம். அனைத்து கட்சியினரும் இதில் பொறுப்பாளர்களாகவும், உறுப்பினர்களாகவும் உள்ளனர். இந்த இயக்கம் மக்கள் பிரச்சினைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. இந்தப்பணி வருங்காலங்களிலும் தொடரும். 2026 தேர்தல் நேரத்தில் கலப்பை மக்கள் இயக்கம் தனது ஆதரவு குறித்த தகவலை வெளியிடும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பேட்டியின் போது மாவட்ட கலப்பை மக்கள் இயக்க தலைவர் வழக்கறிஞர் டி.பாலகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் சிவராஜன், மாவட்ட அமைப்பாளர் விஜெயதா சேகர், மாவட்ட மகளிரணி தலைவி வரலெட்சுமி, அகஸ்தீஸ்வரம் ஒன்றிய மகளிரணி செயலாளர் செல்வ லெட்சுமி, ஒன்றிய அமைப்பாளர் கார்மல், கொட்டாரம் பேரூர் செயலாளர் ரகுபதி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

P.T Selvakumar
Pro Mani Madhan